Monday, July 12, 2010

கானகப்பட்சி




பறந்து திரியும் சிறு பறவையவள் -
ஆனால் உறுதியானவள்.

வண்ணங்கள் கூத்தாடும் மென் இறகுகள்
மலரின் இதழ்கொண்டும், மகரந்தத்துகள் கொண்டுமானது
எனினும் அவள் உறுதியானவள்.

பறக்கும் வெளி முழுதும் குறுகலான போதும்;
யுகங்களாலான தனிமை பின் தொடர்ந்த போதும்;
திறக்காத தன் கதவினை தென்றல் மீண்டும் மீண்டும்
மறுதலித்த போதும்;
அலறலுடன் ஆடைகள் யாவும் கலைக்கப்பட்ட போதும்;
தன் நடன அசைவுகள் யாவும் உறைந்த போதும்;
தன் கீதங்களனைத்தும் மௌனித்த போதும்;
சிலுவைகள் சிதறிக்கிடக்கும் வனத்திலிருந்து
வெளியேற்றப்பட்ட போதும்;
தன்னால் மறித்துவிட இயலாத போதும்;

அல்லது

தன்னிடம் உறுதியே இல்லாத போதும் கூட
அவள் வெகு உறுதியானவள்தான்

ஏனெனில்

அவள் ஒரு கானகப்பட்சி

1 comment:

  1. வலையுலகத்திற்கு வரவேற்கிறோம். இந்த வலைவெளியையும் உன் சிறகுகள் பறந்து திரியட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete